மதுசார பாவனை எதிர்ப்பு தினம் 2018
ஒக்டோபர் மூன்றாம் திகதி மதுசார எதிர்ப்பு தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு தினத்தை பிரகடனப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்று நோக்கினால் பல்வேறு விடயங்கள் நினைவிற்கு வருகின்றன.
வருடமொன்றிற்கு மதுசார பாவனையினால் உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3 மில்லியல் மக்கள் மரணிக்கின்றனர், அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6% வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1% வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000 பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297 மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால் செலவழிக்கப்படுகின்றது. மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இள வயதிலேயே விதவையாக்கப்பட்டு பிள்ளைகள் அநாதைகளாகின்றனர். செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தொகையாகும் அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக்கொடுக்கும் இலாபம். சில கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோரிற்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2/3 பங்கு மதுசாரத்திற்கே செலவழிக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் உணவிற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் கூலித் தொழில் செய்பவர்களாகவே உள்ளனர்.
மதுசார நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருடமொன்றிற்கு 60 பில்லியன் இலங்கை ரூபாய் வரித்தொகையாக கிடைக்கப்பெற்றாலும் 212.6 பில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனையினால் ஏற்படும் நோய்களிற்கும், பிரச்சினைகளுக்கும் செலவிட வேண்டியுள்ளது இதனால் அரசாங்கம் வருடாவருடம் நஷ்டத்தையே தழுவுவதாக சுகாதார அமைச்சு மற்றும் மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிபார சபையின் தலைவர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதுசாரம் தொடர்பில் பல்வேறு மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் திணித்து இந்த நவீன காலத்திலும் அதனை நம்ப வைக்குமளவு சதித்திட்டங்களை வகுத்துக்கொண்டு மதுசார பாவனையை ஊக்குவிக்க வேண்டும் என்று இலங்கை நாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உதாரணமாக உடற்களைப்பு நீங்க வேண்டும் என மதுசாரம் அருந்துவோரின் உடற்களைப்பு மதுசாரம் அருந்தியதன் பின்னர் குறைவடைகின்றதா? என ஆராய்ந்து பாருங்கள்.
மதுசார வகைகள் மூளைதிறன் விருத்தியை குறைக்கக்கூடியது(Depressant), அது ஒரு ஊக்கியல்ல (Depressant)என்று மருத்துவம் சொல்கின்றது. மேலும் மதுசாரம் உடலினுள் செல்லும் அளவு அதிகரிப்பிற்கேற்ப ஒருவிதமான உடல் அசௌகரியமும், உடல் சோர்வும் மாத்திரமே ஏற்படுகின்றது. பல்வேறு சூழற்காரணிகளினாலேயே மதுசாரம் விரும்பத்தக்க ஒரு பானமாக விளங்குகின்றது. அதாவது எந்தவொரு பொருளும் உடலினுள் சென்று அதன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு சில நேர இடைவெளி தேவை. குறிப்பாக மதுசாரம் உடலினுள் சென்று விளைவை ஏற்படுத்துவதற்கு 20 நிமிடங்கள் தேவைப்படுகின்றது என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது மதுசார போத்தலைக் கண்டவுடன் அல்லது ஒரு குவளையை குடித்த மறு கணமே அருந்தியவர்களின் செயற்பாடுகள் மாறுவது எப்படி?
அதாவது சிறிய வயதிலிருந்தே ஊடகங்களின் மூலம், திரைப்படங்களின் மூலம் சாராயம், பியர் என்பன சந்தோசமான ஒன்றாகவும், மதுசாரம் அருந்தியவுடன் அந்த நபரின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இளைஞர்களின் மனதில் பதிந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பியர்;, சாராயம் போன்ற மதுசாரக் கம்பனிகளும் நேரடியாக விளம்பரங்கள் செய்து இது போன்ற போலியான நம்பிக்கைகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. அத்தோடு சமூகத்தில் காணும் ஒவ்வொரு காட்சிகளும் இது போன்ற மூடநம்பிக்ககைளை சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன . அதனால் மதுசாரம் அருந்துவோர் அதன் மூலம் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், உடற்கஷ்டங்கள் நீங்குவதாகவும், பல்வேறு பிரச்சினைகளை மறக்கச் செய்வதாகவும் எண்ணிக்கொண்டுள்ளனர்.
எனவே சாராயம், பியர் போன்றன நாற்றமான, கசப்பான, எரிவான, வாந்தி போகும் உணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும், அதைச் சூழ ஏற்படுத்தப் பட்டிருக்கும் நம்பிக்கைகள், அடையாள அறிகுறிகள், கவர்ச்சிகரமான வசனங்கள், குடிக்கும் முறை, குடிக்கும் இடம், குடிக்கும் சந்தர்ப்பம் போன்றவைகளினால் உண்மை மறைக்கப்பட்டு போலியான மூடநம்பிக்கையில் இளைஞர்கள் சிக்கித்தவிக்கின்றனர்.
எமது நாட்டின் நிலைமை
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தனிமனித மதுசார பாவனையானது ஒப்பீட்டளவில் குறைவாகும். 2.5 லீற்றர் தொடக்கம் 3 லீற்றர் வரையான அளவே இலங்கையின் தனிநபர் மதுசார பாவனையென கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தனிமனித மதுசார பாவனையானது 10 லீற்றர்களாகும் அதாவது மதுசாரம் அருந்துவோரில் தனிமனிதன் அருந்தும் வீதம் அதிகமாகும்.
மதுசார பாவனையை குறைத்துக்கொள்வதற்கும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கும் மேற்கொள்ளக்கூடிய பயன்தகுந்த வழிமுறைகள்:
எந்தவொரு பொருளிற்கும் தாராளத்தன்மை அதிகமாக இருந்தால் அதற்கான கேள்விகளும் அதிகரிக்கும். அதே வேளை, மாறாக பொருளின் கேள்வி குறைவடையும் போது அதன் விற்பனை எந்தவிதமான அழுத்தங்களும் இன்றி குறைவடையும் என்பது பொருளியல் நியதி. மதுசார சாலைகளின் அளவும் மதுசார பாவனையை தீர்மானிக்கும் சக்திகளில் பிரதான ஒன்றாகும், நிலையான மாற்றங்களை நோக்கி செல்லும் போது மதுசாரத்திற்கான கேள்வியைக் குறைக்கும் செயற்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவது மிகவும் பயனுள்ள வழிமுறையாகும்.
01. பயன் தகு கொள்கைகளை உருவாக்குதல் (Effective policies)
02. பழகும் முன் காத்தல்(Prevention)
03. உளவியல் சிகிச்சை முறை (Counseling)
பயன் தகு கொள்கைகளை உருவாக்குதல்
மதுசார பாவனையைக் கட்டுப் படுத்துவதற்கு சட்ட ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இம்முறை பாவிக்கப் படுகின்றது.
சரியான முறையில் மதுசார வகைகளின் விலையை அதிகரித்தல் மற்றும் வரி அறவீடு செய்தல்.
மதுசாரம் மற்றும் மதுசார பாவனை கவர்ச்சியாகும் விதங்களை கண்டறிந்து அதனை பலமிலக்கச் செய்தல்.
பழகும் முன் காத்தல்
மதுசார பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப் பயன் கூடியதும், இலகுவானதுமான முறையாகும்.
மதுசார பாவனையினால் ஏற்படும் இணங்காணக் கூடியத் தாக்கங்களை சிறுவர், இளைஞர்களுக்கு புரியவைத்தல்.
இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப் படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாக தெளிவூட்டல்;. அவ்வாறான விளம்பரங்களுக்கு ஏமாறாமலிருப்பதற்குரிய உத்திகளை தெளிவுப் படுத்தி வழிகாட்டுதல்.
மதுசார பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் தெளிவுப்படுத்தல்.
உளவியல் சிகிச்சை முறை
தற்போது மதுசாரம் பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்சை முறை பாவிக்கப் படுகின்றது.
உள நல வைத்திய ஆலோசனையின படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற் கொள்ளலாம்.
01. மதுசார பாவனையை நிறுத்துவதற்கான நாளொன்றை தீர்மானிக்கவும்
02. இது தொடர்பில் ஏனையோருடன் கலந்துரையாடவும் (மனைவியிடம், பிள்ளைகளிடம், நண்பர்களுடன், அயலவர்களுடன்)
03. இறுதியில் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கவும் (மதுசார பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களிடமிருந்து கிடைக்கவிருக்கும் தாக்கங்கள், விசேட தினங்களின் போது நீங்கள் நடந்துக் கொள்ள வேண்டிய முறை பற்றி திட்டமிடுங்கள்)
04. மதுசார பாவனையை நிறுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை முறியடிக்கவும் மதுசார பாவனையை தூண்டுவதற்கும் காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாராகுங்கள் (உதாரணமாக நான் மதுசாரம் அருந்துவதை நிறுத்திவிட்டேன் என்னை பலவந்தப் படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்)
114 Viewers